July 16, 2007

ஹைக்கூ!

இரவலாக பெற்றாலும்
இரவுக்கு துணையாய்
வெண்ணிலா!

ஹைக்கூ!

விபத்துகள் குறைந்தப்பாடில்லை;
ஆனாலும் எட்டு போடச்சொல்லும்
லைசென்ஸ் அதிகாரி!

ஹைக்கூ!

உறங்கிய பின்னும்
உறங்குவதில்லை.
என் உணர்வுகள்!

எங்களை புதைக்காதீர்கள்!

எங்களை புதைக்காதீர்கள்!
இரவோ, பகலோ
இதயமற்ற
சில மனித மிருகங்கள்
எங்களை தோண்டியெடுத்து,
பாலியல் பலாத்காரம்
செய்யக்கூடும்.
தயவுசெய்து
எங்கள் பிணங்களுடன்
எங்கள் உணர்வுகளையும்
சேர்த்து எரித்து விடுங்கள்!

நாடோடி வாழ்க்கை!

நாகரீகம் வளர்ந்தும்
நாடோடி வாழ்க்கை
வாழ்கிறான் மனிதன்.
வாழ்வை உணராத வரையில்!

ஹைக்கூ - முரண்

"படைத்தவனே பகையாளி"
ரிக்ஷாவில் கண்ட வாசகம்.
அதற்கு மேல் வரியில்
"கோட்டூர் குருசாமியே துணை".


சிந்தனை செய் மனமே!

ஆசிரமவாதிகளுக்கு
குறைவில்லை; ஏமாந்த
இந்திய மக்கள்
இருக்கும் வரை!

என் உணர்வுகள் ஊமையில்லை!

மொழி தெரிந்தும்
மொழிப்பெயர்க்க முடியவில்லை
என் உணர்வுகளை!

உன்னை மட்டும்
நெஞ்சில் சுமக்கின்றேன்
ஒரு சுமைதாங்கிப் போல!

அன்பு வைத்ததென்னவோ
அறவழியில் தான்.
இருந்தும் தெரியவில்லை − அது
அறவழி வன்முறை என்று!

என்
உணர்வுகளின் உச்சரிப்பு
நீ உணரும் வரையில்
உணரப்படாதது!

என்
உணர்வுகள் ஊமையில்லை.
ஊமையானது
என் உள்ளம் தான்!

காதல் மனம்

காத்திருந்த காலமெல்லாம்
எனக்காக நான் சேர்த்திருந்தால்
என் பாலைவனமும்
சோலைவனம் ஆகியிருக்கும்
பாழாய்போனது
என் காதல் மனம்!

June 12, 2007

குடையிருந்தும் நனைகிறேன்


என் காதலை
உதறி சென்ற உன்னை
நினைக்கும் போது
குடையிருந்தும் நனைகிறேன்
கண்ணீரால்!

காயம்பட்ட
என் இதயத்தின் பிம்பத்தில்
எதிர்ப்படும் உருவமெல்லாம்
உன் உருவமாகவே
வந்து காட்சியளிக்கிறது!

நிலத்தில் சிதறிய
தண்ணீரில் தான்
என்னைப் போல,
எத்தனை பேரின்
கண்ணீரும் கலந்திருக்குமோ!

தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்!

இறைவன் கொடுத்த அமுதே!
எங்கள் வழ்வின் ஆதாரமே!
தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்!


ஆனால்
இன்று வறண்டு போன
என் மக்களின் கண்களிலோ
கண்ணீர்! கண்ணீர்! கண்ணீர்!


எங்கள் வாழ்வும்
வளமற்று காணப்படுகிறது.
வறண்டு போன - இந்த
பூமியைப் போல!


விவரமறியாத வயதிலும்
விதைத்துக்கொண்டோம்
எங்கள் மனதில் - இனி
எங்கள் மக்களின் தேவை
தண்ணீரேயன்றி, கண்ணீரல்ல என்று!

உன் வரவோலைக்காக!

உடையிடையில் தெரியவில்லையடி
உந்தன் மடியிடை - என்
கடைவிழி பார்வைக்கு!


உன்னதமான உன் மென்மை
என்னை மலைக்க செய்தது!


மென்மையான உன் உள்ளம்
வன்மையாக தண்டித்தது என்னை!


கூர்மையான உனது பார்வையில்
வலிமையிழந்து போனேன் நான்!


கதிரவனின் வருகையால்
காரிருள் மறைந்தது போல - உன்
முகவொளி கண்டு - என்
பேரிருள் அகன்றது!


வெண்மையான
உன் உள்ளத்தில் இடம்பெற - நான்
என்ன தவம் செய்ய...
இலக்கியமே உருவான - என்
இலக்கியா!


உன்
இதயத்தில் இடம் தருவாயோ
இந்த நாடோடிக்கு!


கடலலை என்னைக்
கடந்து சென்றாலும்
அழியாத என் அன்பு
உன் ஒருத்திக்குதான்!


உடைவாளை
என் இதயத்தில் தாங்கி
உன் வரவோலைக்காக
காத்து நிற்கிறேன்!

வீரத்தாய்!

வீரத்தாய்
பெற்றெடித்த மூன்று
ஆண் சிங்கங்கள்!


தாரம் மறந்து
நேரம் வர
நின்றனர்!


தேசம் காக்க
பாசம் துறந்து
போருக்கு சென்றனர்!


அங்கே
போரிலே
'மூத்தமகன் வீரமரணம்'


ஈன்ற பொழுதைக்
காட்டிலும் பெரிதுவக்கும் - அந்த
வீரத்தாய்!


அங்கே
போரிலே
'இரண்டாமவன் வீரமரனம்'


பாரிலே உண்டோ
எங்கள் குல வீரம்.
நெஞ்சுயர்த்தி நின்றாள் - அந்த
வீரத்தாய்!


அங்கே
போரிலே
'மூன்றாமவன் வீரமரணம்'


கண்ணிலே கண்ணீர்
நெஞ்சிலே உதிரம்
கொட்ட உருகினாள்.


நாட்டைக் காக்க
வேட்டைக்கு அனுப்ப
இன்னொரு மகன் இல்லையே
என்று நினைக்கும்போது!

காதல் துறவி!

நான்
மனிதனானேன் - அவள்
என்னைக் காதலிக்கும்போது!


நான்
கவிஞனானேன் - அவள்
என்னைப் பிரியும்போது!


நான்
துறவியானேன் - அவள்
இன்னொருவனின் கைபிடிக்கும்போது!

இதோ எந்தன் தேவதை!

அமைதியான சூழல் - அதிலும்
பனி மழைச் சாரல்!
கூந்தல் விரித்த மாதுவோ! - இவள்
தோகை விரித்த மயிலோ!
ஒய்யார நடையோ - இவள்
நடையில் அன்னத்தின் வடிவோ!
மழையை விரும்பும் மனமோ! - இவள்
மங்கையரில் சிறப்பு யினமோ!
செதுக்கிய சிலையோ! - இவள்
செந்நாப் புலவரின் மகளோ!
மாசற்ற மணியோ! - இவள்
மங்காத வாழ்வின் ஒளியோ!
நங்கையரில் சிறந்த உன்னை
சிறையெடுக்க - இதோ
எந்தன் காதல் கவிதை!

May 3, 2007

இன்றேனும் பேசு நண்பா!

இன்றேனும்

பேசு நண்பா!

ஆனால் நீ மட்டும் நீயில்லை!

நீயில்லை

என்பதற்கு

காரணம் புரியவில்லையா!

சிந்திக்க நேரமில்லையா! - இல்லை

பேச மனமில்லையா!

பழகிய உனக்கும்

எனது உணர்வுகளின்

வெளிப்பாடு புலப்படவில்லையா! - ஆனால்

என்னை மட்டும் கேட்கிறாய்.

நீ, நீயில்லை என்று!

இயல்பு மாறுகின்றதென்றால் - அங்கே

மனதுக்கு மாறானதொன்று

நிகழ்ந்துள்ளது என்று - நீ

புரிந்துக்கொள்வது என்று!

காதலும், நானும்!

காதல் கொண்ட

நானும்

கவிதை எழுதினேன்.

இளைஞர்களே...

காதலில் இளமையை

இழக்காதீர்கள் என்று!

காதல் வேட்டை!

உன்

விழியெனும் அம்புதனில்

என்

இதயமானை வீழ்த்திவிட்டாய்.

காதல் வேட்டையில்!

April 20, 2007

பெருமைக்காக அல்ல!




வீதியில்...
மயில்வாகனத்தில்
மாப்பிள்ளை கோலத்தில்
ஊர்வலமாய் நான்!
பெருமைக்காக அல்ல.
மயில்வாகனத்தை நம்பி,
வாழ்க்கை நடத்தும்
மயில் வாகனனுக்காக!

April 13, 2007

நினைவலைகள் ஓய்வதில்லை!

அழியாத
நினைவுகள்
என்றுமே அழிவதில்லை!

விழியால்
கண்ட காட்சிகள்
என்றுமே நிலைப்பதில்லை!

கழியாத
நாட்களென
என்றுமே ஒன்றுமில்லை!

ஆழியால்
பெற்ற முத்துக்கள்
என்றுமே தரம் குறைவதில்லை!

மழையால்
பெற்ற வளங்கள் அனைத்தும்
புவிக்கு சொந்தமில்லை!

சோழியால்
சொன்ன வார்த்தைகள்
எல்லாம் பழித்ததில்லை!

நாழிகையால்
கண்ட உண்மைகள்
அனைத்தும் விளங்குவதில்லை!

நட்பின்பால்
பெற்ற அன்பு
என்றுமே தேய்வதில்லை!

நினைவலைகள்
என் மனக்கடலில்
என்றுமே ஓய்வதில்லை!




விடியலை நோக்கி...

இதுவும்
இயற்கையின் ஒரு
சுயநலக் கொடுமைதான்.


ஒரு
ஆண்மகனை,
தன் கணவனை
ஒரு
கண்ணியத் தாய் சுமக்கிறாள்.
ஏதுமறியாத
அரைசித்தத்தில் - அந்த
ஆண்மகன்!


விளங்காத இந்த உலகம்
ஒரு வகையில்
அவனை
விலங்கிட முடியாமல்
தவிக்கிறது.


பிறர்
வெறுப்பிலும் - சிரிப்பு!
தன் மனைவியின்
வெம்மையிலும் - சிரிப்பு!
அது ஒன்றே
இறைவன் அவனுக்கு
கொடுத்த வரம்.


இலக்கு இல்லாத
அவன் வாழ்வில்
விடியலைத் தேடியே
அவன் மனைவி!


விடியும்பொழுது ஒவ்வொன்றும்
தன் வாழ்வில் விடியாதபோது
பொறுப்புகளுடன் சேர்த்து
தன் கனவனையும்
சுமந்து கொண்டு
பயணமாகிறாள்,
விடியலை நோக்கி! - அந்த
பூக்காரத் தாய்!







உறங்காத விழிகள்

மழைக்கும் கூட மனமில்லை!

ஆழ்ந்து உறங்கிய சிறுவனையும்

விட்டுவைக்கவில்லை.

தட்டி எழுப்பி, ஓரிடத்தில்

உருட்டினாள் தாய்.

உறக்கம் கலைந்த நிலையில்

சோர்ந்த இரண்டு விழிகளும்

விழித்துக் கொண்டிருந்த வானத்தையே

பார்த்திருந்தன விடியும்வரை!

விழித்திருந்தது அவனது விழிகள் மட்டுமல்ல,

இரவில் உறக்கத்தை மறந்த

அத்தனை நடைப்பாதை மக்களும்தான்!




உனக்காக ஒரு கவிதை!

பெண்ணே!
உன்னைக் காண
துடிப்பது
கண்கள் மட்டுமல்ல.
என் இதயமும்தான்!


என்
இதயமும்
கற்பனையின் பிரதிபலிப்புதான்
உன்னைக்
கானும் வரையில்!


உன்
கடைக்கண் பார்வைக்காக
காத்திருப்பேன்
என்றும்
உன் நினைவோடு!


நான் இன்னும் பார்க்காத அவளின் நினைவாக



ஹைக்கூ - நடைவண்டி

நடைவண்டி

தேவைதான் நம்நாட்டு

ஹை-ஹீல்ஸ் கன்னிகளுக்கு!


ஹைக்கூ - ஞானம்

புத்தனுக்கு

போதி மரத்தில் - ஞானம்!

பித்தனுக்கு

காவி நிறத்தில் - ஞானம்!